அன்றைய இந்தியர்கள் கணித சிந்தனைகளை “சுல்ப சூத்திரங்கள்” என்ற தொகுப்பில் அமைத்தனர். கணிதத்தில் மிக முக்கியமான தேற்றமாக கருதப்படுவது பைத்தாகோரஸ் தேற்றமாகும். இந்த தேற்றத்தை கி. பி, ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கணித மேதையான பைத்தாகோரஸ் என்பவரையே சாரும். ஆனால் பைத்தாகோரஸ் காலத்திற்கு கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்தியாவின் பௌத்தயானா என்பவர் பைத்தாகோரஸ் தேற்றத்தின் விளக்கத்தை பொதுவாக நிரூபணமில்லாமல் வழங்கியிருந்தார். இதை அக்கால தெய்வ வழிபாட்டிற்கு தேவையான யாக குண்டம் அமைக்க தகுந்த அளவீடுகளை ஏற்படுத்த வழங்கியதாக நம்பப்படுகிறது. இவர் மற்ற பண்டைய இந்திய அறிஞர்களை போல ஒரு ஞானியாக கருதப்படுகிறார். கிட்டத்தட்ட கி. மு. 800 ஆம் ஆண்டில் வாழ்ந்த பௌத்தயானா படத்தை காணலாம்.

பௌத்தயானா வழங்கிய சுல்ப சூத்திர மூல குறிப்பை கீழ் காணலாம். மேலும் இச்செய்யுள் கூறும் கருத்தை கீழ்காணும் படம் மூலம் அறியலாம்.

“dīrghasyākṣaṇayā rajjuH pārśvamānī, tiryaDaM mānī, cha yatpṛthagbhUte kurutastadubhayāṅ karoti.”

இந்த செய்யுளுக்கு ஒரு கயிறை கொண்டு மூளைவிட்டத்தில் அளந்தால் கிடைக்கும் பரப்பு அந்த கயிறின் கிடைமட்ட மற்றும் செங்குத்து அளவிலாளான பரப்பிற்கு சமமாகும்என அர்த்தம் அமையும்.

பௌத்தயானா வழங்கிய சுல்ப சூத்திரத்தில் கயிற்றை செங்கோணத்தின் மூலைவிட்டம் மற்றும் அடுத்த பக்கங்களில் அளப்பதாக வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் அவர் கூற வந்த செய்தி மூலம் அவர் செங்கோணத்தை மனதில் கொண்டு தான் இந்த குறிப்பை ஏற்படுத்தியிருக்க கூடும் என இன்று அறிஞர்கள் உறுதியாக நம்புகின்றனர். உண்மையில் பௌத்தயானா செங்கோணத்தை கூறியிருக்கும் தருவாயில் அவரே கணிதத்தில் மிக முக்கிய தேற்றத்தின் முதல் சிந்தனையை ஏற்படுத்திய பெருமையும், புகழையும் பெறுகிறார். இத்தேற்றம் இல்லாமல் எந்த பொறியியல் கணக்கீடும் செய்ய இயலாது. அதேபோல், கட்டிடக்கலை, வானியல் கணக்கீடு போன்ற எந்த கணக்கும் இந்த தேற்றம் இல்லாமல் கணிக்க இயலாது. எனவே இப்படிப்பட்ட முக்கிய தேற்றத்தை முதன்முதலில் ஒரு இந்தியரான பௌத்தயானா வழங்கியிருக்கிறார் என அறியும் பொழுது நமது நாட்டின் அறிவியல் சிந்தனையின் தொன்மையும், பெருமையும் நன்கு புலப்படும். இன்று அநேக அறிஞர்கள் பைத்தாகோரஸ் இந்தியாவிற்கு ஒரு காலக்கட்டத்தில் வந்தபொழுது தான் நம்மிடம் இருந்து இன்று அவர் பெயரில் விளங்கும் தேற்றத்தை கற்று சென்றார் என கூறுகின்றனர். எனவே உண்மையில் பைத்தாகோரஸ் தேற்றத்தை பௌத்தயானா தேற்றம் என்று அழைப்பதே தகுந்ததாகும். இந்தியர்களின் கண்டுப்பிடிப்பை வேறு பெயர்களில் இன்று அழைப்படுவதற்கு முக்கிய உதாரணமாக இத்தேற்றம் அமைகிறது.

இதேபோல்ஒரு கயிறை சதுரத்தின் மூளைவிட்டத்தில் அளந்தால் கிடைக்கும் பரப்பு அதன் பக்கங்களில் அளக்கும் பரப்பிற்கு இரு மடங்காக அமையும்என்று தெளிவாக கூறியிருக்கிறார். இக்கூற்று இருசமப்பக்க செங்கோண முக்கோணத்தில் பைத்தாகோரஸ் தேற்றத்தை உறுதி செய்கிறது. மேலும் இரண்டின் மூலவர்க மதிப்பை ஐந்து தசம புள்ளிகள் வரை கீழ்காணும் செய்யுள் மூலம் பௌத்தயானா வழங்கியிருந்தார்.

samasya dvikaraṇī. pramāṇaṃ tṛtīyena vardhayet
tac caturthenātmacatustriṃśonena saviśeṣaḥ

இச்செய்யுளின் படி இரண்டின் மூலவர்கதை கீழ்காணுமாறு பெறலாம்.

பௌத்தயானாவிற்கு பிறகு அபஸ்தம்பா, மானவா, காத்யாயனா, வராகமிகிரா, மகாவீராச்சிரியா போன்ற எண்ணற்ற இந்திய அறிஞர்கள் கணிதத்தில் பல புதிய சிந்தனைகளை ஏற்படுத்தி மற்ற குடியினருக்கு கணிதத்தில் முன்னோடிகளாக திகழ்ந்தனர்.

கி. மு. 600 ஆம் ஆண்டில் வாழ்ந்த கன்னதா என்ற இந்திய அறிஞர் நியாய தர்சனம் என்ற நூலில் மூன்றாம் அத்யாயத்தில் 46 வது செய்யுளாக கீழ்காணும் குறிப்பை ஏற்படுத்தியிருந்தார்.

Aprapyagrahanam kayabhrapatalasphatikantaritopalabdheh

இச்செய்யுள் “வெறும் கண்களுக்கு புலப்படாத செய்திகளை கண்ணாடி (Glass), அப்ரகம் (Mica), படிகம் (Crystal) போன்ற பொருட்களால் ஆன வில்லை (Lens) மூலம் புலப்படும்” என்று பொருள்படும். இதிலிருந்து வில்லை(Lens), தொலைநோக்காடி (Telescope), நுண்ணோக்காடி (Microscope) போன்ற நவீன ஒளியியல் உபகரணங்களை கொண்டு கண்ணால் காண முடியாத செய்திகளை அறியலாம் என்ற தத்துவத்தை கிட்டதட்ட 2600 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பது உண்மையில் வியப்பாகவே உள்ளது. இந்த நூலில் இது போன்ற ஒளியியல் சார்ந்த குறிப்புகள் ஏராளமாக காணக்கிடைக்கிறது.

இப்புவியில் பொருட்கள் மேலிருந்து கீழே விழுவதற்கு ‘குருத்வா’ என்ற விசையின் ஆதிக்கமே என்று கன்னதா கூறியிருக்கிறார். சமஸ்கிருத வார்த்தையான ‘குருத்வா’ என்பதற்கு ‘புவி ஈர்ப்பு’ என்று பொருள்படும். எனவே ஆங்கில அறிவியல் மாமேதையான ஐசக் நியூட்டன் 17 ஆம் நூற்றாண்டில் விவரித்த புவி ஈர்ப்பு கோட்பாட்டை கிட்டத்தட்ட 2200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் அறிந்திருந்தனர் என்பது இதிலிருந்து புலனாகிறது.

கன்னதா

உலகில் முதன்முதலில் அணுவின் தன்மையை இவரே வழங்கியிருந்தார். இவரது கருத்துப்படி “ஒரு கருப்பொருளில் அமையும் துகள்களின் அணுக்கள் அழிவில்லா தன்மையை பெரும்” என்பதாகும். எனவே அணு ஒரு அழிவில்லாத தன்மையை பெற்று இவ்வுலகில் அனைத்து பொருளிலும் தோன்றும் என்ற மிகப் பெரிய அறிவியல் உண்மையை அன்றே கன்னதா விளக்கியிருந்தார். இவ்வாறு பல இயற்பியல் சிந்தனைகளை அன்றே உருவாக்கி இருந்ததை காணும் பொழுது இன்றும் நமக்கு பிரம்மிப்பாக உள்ளது. மேற்கூறிய கருத்துக்களால் இவரை உலகின் இயற்பியல் முன்னோடி என்று கருதலாம்.

கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நிகழ்ந்த பெரும் போரில் ஒரு நகரையே அழிக்கும் வல்லமை படைத்த அணு சக்தி கொண்ட ஆயுதங்களை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான உயிர் சேதங்களை நிகழ்த்தியது இன்று கண்டறியப்பட்டுள்ளது. மகாபாரத போர் நடந்ததாக கூறப்பட்ட இடத்தில சில வருடங்களுக்கு முன் நிகழ்த்திய ஆய்வில், அவ்விடத்தில் அணு சக்தி ஆற்றல் உடைய ஆயுதங்களை பயன்படுத்தியதற்கு அதிக சான்றுகள் கிடைத்துள்ளன. இதிலிருந்து அணுவை அழிக்க இயலாது என்பதை மட்டும் இந்தியர்கள் அறிந்திறாமல் அந்த அணுவை பிளந்து அதன் கருவை துளைத்து பல சேதங்களை ஏற்படுத்தினார்கள் என அறிகிறோம். இந்த தன்மையை இன்று “அணுக்கரு இயற்பியல்” என்று அழைக்கிறோம். ஆனால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் இந்த செய்தியை அறிந்தது மட்டுமிலாமல் அதனை பயன்படுத்தியும் இருந்ததை உணரும்பொழுது உண்மையில் நம் உள்ளம் உறைந்து போகிறது.

இந்த மகாபாரத அணுக்கரு போர் விவரத்தை பதினெட்டு புத்தகங்களை கொண்ட மகாபாரதத்தின் பதினாறாம் புத்தகத்தில் காணலாம். மேலும் இப்போரில் அணு ஆயுதங்கள் உபயோகப்படுத்தியதற்கு இரு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, மகாபாரத போர் மொத்தம் பதினெட்டு நாட்களே நடந்ததாக கூறப்படுகிறது. அப்படி பதினெட்டு நாட்கள் மட்டுமே நடந்த போரில் சாதாரண ஆயுதங்களை பயன்படுத்தி எவ்வாறு கோடிக்கணக்கில் உயிர் சேதங்களை ஏற்படுத்த முடியும்? இரண்டாவதாக, மகாபாரதத்தின் பதினாறாம் புத்தகத்தின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட செய்தியை காண்போம்: “மகாபாரத போர் முடிந்து 36 வருடங்களுக்கு பின் எல்லா பக்கத்திலிருந்தும் கற்களும் பாறைகளும் சிதறி கிடந்து காற்றின் வேகத்தில் அங்குமிங்கும் பரவி கிடக்கின்றன. கண்ணுக்கு எட்டிய இடமெங்கும் எல்லா திசையிலும் ஒரே இருளடைந்த இயற்சூழ்நிலையாக காட்சியளிக்கிறது. நெருப்பை கக்கி கொண்டு வானில் இருந்து பூமிக்கு கரித்துண்டுகள் விழுகின்றன. சூரியனின் வட்ட உருவம் எங்கும் புழுதி படிந்ததால் எப்பொழுதும் மங்களாகவே காட்சியளிக்கும்” என அமைகிறது. இது போன்ற வர்ணனை தோன்றுவதன் மூலம் மகாபாரத போரில் நிச்சயம் அணு ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்று திண்ணமாக நம்பலாம். மேலும் History TV தொலைக்காட்சியில் மிக பிரபலமான “The Ancient Aliens” தொடரில் இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்கள்.

Robert Oppenheimer என்பவரே நவீன அணுகுண்டை முதன் முதலில் 16/7/1945 ல் சோதனை செய்த குழுவின் தலைவராக விளங்கியவர். இவரை அணுகுண்டு தயாரிப்பின் தந்தை என கருதுவர். இவர் ஒரு பள்ளியில் சொற்பொழிவாற்ற சென்ற பொழுது அங்கிருந்த ஒரு மாணவன் “நீங்கள் நடத்திய அணுகுண்டு சோதனை தான் பூமியில் நிகழ்த்தப்பட்ட முதல் சோதனையா?” எனக் கேட்க, அதற்கு Oppenheimer சற்று சிந்தித்து “ஆம், ஆனால் நவீன காலத்தில் . . .” என்று பதிலுரைத்தார்.

பண்டைய இந்திய வேதியியல் இரசவாதத்தின் அடிப்படையில் அமைந்தது. இப்பிரிவில் அன்றைய இந்தியர்கள் காந்தங்களை கீழ்காணும் செய்யுள் மூலம் குறிப்பிடிருந்தனர்.

Bhramakam cumbakam caiva karsakam dravakam tatha Evam caturvidam kantam romakantam ca pancamam Ekadvitricatuhpancasarvatomukhameva tat Pitam krsnam tatha raktham trivarnam syat prthak prthak

மேற்கண்ட குறிப்பில் “காந்தங்கள் மொத்தம் ஐந்து வகைப்படும் என்றும், ஒவ்வொன்றிற்கும் ஒன்று முதல் ஆறு முகங்கள் அமைந்திருக்கும் என்றும், இவை ஒவ்வொன்றும் மஞ்சள், கறுப்பு, சிகப்பு என்ற மூன்று வண்ணங்களில் அமையும்” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்த குறிப்பு 12 ஆம் நூற்றாண்டில் வழங்கப்பட்டது. இந்த கூற்றின் விளக்கப்படி மொத்தம் 5 x 6 x 3 = 90 வகையான காந்தங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. காந்தங்களின் அறிவியல் செய்திகளை ஐரோப்பாவில் பல நூற்றண்டுகளுக்கு பின்பே அறிந்தார்கள். எனவே காந்தத்தின் அறிவியல் செய்திக்கு இந்தியர்களே முதல் கருத்துக்களை வழங்கியிருந்தனர்.

நாம் இப்பொழுது கீழ்காணும் இரு செய்யுள்களை கருதிக்கொள்வோம்.

Dadhartha prthivimabhito mayukhaih

Mitro dadhara prthivimutadyam Mitrah krstih

இந்த செய்யுள்கள் இரண்டும் வேத காலத்தில் வழங்கப்பட்டவை. இரண்டுமே “சூரியன் பூமியையும் மற்ற வானியல் கோள்களையும் தாங்கி பிரபஞ்சத்தின் மையமாக விளங்குகிறது” என்றும் “சூரியனே அனைத்தையும் சுழல வைக்கிறது” என்ற மகத்தான வானியல் விளக்கத்தை பல்லாயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் அறிந்திருந்ததை காணலாம். இந்த வானியல் செய்தியை ஐரோப்பாவில் காப்பர்னிக்கஸ் என்ற அறிஞரே 1543 ல் தெரிவித்தார். இந்த கண்டுப்பிடிப்பு அறிவியல் வளர்ச்சிக்கு பெரும் துணையாய் அமைந்தது.

நாம் இப்பொழுது ரிக் வேத குறிப்பை கருதிக் கொள்வோம்.

Tatha ca smaryate yojananam sahasram dve dve sate dve ca yojane Ekena nimisardhena kramamana namoSstu te

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த குறிப்பிற்கு 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மதிப்புமிகு சயனச்சார்யா வழங்கிய விளக்கத்தை காண்போம். அவர் வழங்கிய விளக்கப்படி “2202 யோசனைதூரத்தை அரை நிமிடத்தில் கடக்கும் சூரியனுக்கு எங்களின் வணக்கத்தை நினைவு கூர்ந்து வழங்குகிறோம்” என்று பொருள்படும். இந்த குறிப்பு மூலம் எந்த அறிவியல் சிந்தனை தோன்றுகிறது? இதனை அறிய கீழ்காணும் சிறு கணக்கீட்டை காண்போம். (அக்கால கணக்கின் படி 8.75 நிமிடம் என்பது 2 வினாடிகள் ஆகும்).

1 யோசனைதூரம் = 9.6025 மைல்கள் சூரியன் சென்ற யோசனை தூரம் = 2202 சூரியன் மைல்களில் சென்ற யோசனை தூரம்=2202 x 9.6025 = 21144.705 மைல்கள் சூரியன் கடக்க கொண்ட நேரம் = 1/2 நிமிடம் = 1/8.75 = 0.1142857 வினாடிகள் ஒளியின் வேகம் = யோசனை தூரம்/நேரம் = 21144.705 / 0.1142857 = 185016.1918 ஒளியின் வேகம் = 185016.191 மைல்கள் / வினாடிகள் ஒளியின் வேகம் (நவீன மதிப்பு) = 186282.397 மைல்கள் / வினாடிகள்

ரிக் வேத குறிப்பின்படி கிடைக்கும் ஒளியின் வேகத்தின் மதிப்பு இன்றைய உண்மை மதிப்பிற்கு வெகு அருகாமையில் (ஒரு சதவீதத்திற்கு குறைவான பிழையில்) உள்ளதை காணலாம். இதுவே அக்கால அறிவியல் சிந்தனையின் ஆற்றலை நன்கு உணர்த்தும். மேலும் ஒளியின் வேகத்தை ஐரோப்பாவில் முதன் முதலில் கி.பி.1676 லேயே ரோமர் என்பவரால் கண்டறியப்பட்டது. அது வரையில் ஐரோப்பாவில் ஒளியின் வேகத்தை முடிவிலியாக கருதி வந்தனர். உலகின் சிறந்த விஞ்ஞானியாக கருதப்படும் நியூட்டன் கூட ஒளியின் வேகத்தை முடிவிலி எனவே கருதினார். ஆனால் பல நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த இந்தியர்கள் ஒளியின் வேகத்தை மிகத் துல்லியமாக கண்டறிந்து தங்களது அறிவியல் ஆற்றலை வெளிப்படுத்தினர். ஒளி வேகத்தின் உண்மை மதிப்பை கி.பி.1887 ல் மிகேல்சன் மற்றும் மார்லி என்போர் கண்டறிந்தனர்.

நாம் இப்பொழுது எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வழங்கியிருந்த ரிக் வேத செய்யுளை கருதிக்கொள்வோம்.

Trinabhicakramajaramanarvam yatrema visva bhuvanani tasthuh

“வானுலக கோள்கள் அழிவற்ற தொய்வில்லாத நீள் வட்ட பாதையில் சுழன்று கொண்டிருக்கின்றன” என்பதே இச்செய்யுளின் அர்த்தமாகும். மேலும் அன்றைய இந்தியர்கள் நம் பிரபஞ்சத்தை “பிரம்மாண்டா” என்ற சமஸ்கிருத சொல்லால் அழைத்தனர். “பிரம்மாண்டா” என்ற சொல்லிற்கு “பெரிய முட்டை” என்று ஒரு அர்த்தமும் அமையும். வான்கோள்கள் இப்பிரபஞ்சத்தில் நீள்வட்ட பாதைகளில் சுழல்வதையும் நம் பூமி நீள்வட்டத்தின் முப்பரிமாண உருக்கொண்ட முட்டை வடிவில் அமைந்த தன்மையை அறிந்திருந்த அன்றைய இந்தியர்கள் இவ்வாறு அழைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

வானுலக பொருட்கள் நீள்வட்ட பாதையில் தான் சுழல்கின்றன என்ற அறிவியல் உண்மையை ஜெர்மன் நாட்டு வானியல் மேதை கெப்லர் 1609 ல் தான் கூறியிருந்தார். இந்த உண்மையை சிறிது காலத்திற்கு பின் நியூட்டன் நிரூபித்தார். எனவே 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் உணர்ந்து, நிரூபித்த இந்த வானியல் கருத்தை கிட்டத்தட்ட 7700 வருடங்களுக்கு முன்பே இந்தியர்கள் வழங்கியது வானியலில் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. இதிலிருந்து இந்தியர்கள் வானியல் துறையில் உலகிற்கு முன்னோடிகளாக விளங்கினார்கள் என்றும் அறியமுடிகிறது.

இன்றைய கணினி இயங்குவதற்கு ஆதாரமான காரணங்களில் ஒன்றாக அமைவது ஈரடிமான எண்களாகும் (Binary Numbers). இன்றளவில் இந்த ஈரடிமான எண்களை கண்டறிந்த பெருமை ஜெர்மன் நாட்டு பன்முக விஞ்ஞானியான லீப்நிட்ஸ் என்பவரையே சேரும். இவர் இந்த ஈரடிமான எண்களை 17 ஆம் நூற்றாண்டில் கண்டறிந்தார். ஆனால் கிட்டத்தட்ட 2100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிங்களா என்ற இந்தியர் இதே கருத்தை வழங்கியிருக்கிறார். கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பிங்களா ஈரடிமான எண்களின் தன்மையை தெளிவாக விளக்கி எந்த எண்ணையும் ஈரடிமான எண்களை கொண்டு எழுத முடியும் என தனது படைப்பான “சந்தஸ் சாஸ்த்ரா” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். எனவே உண்மையாக பார்க்க போனால் பிங்களா தான் ஈரடிமான எண்களை கண்டறிந்த பெருமைக்கு உட்பட்டவர் என தெரிகிறது. மேலும் ஈரடிமான எண்களே இன்றைய கணினியின் அடிப்படை செயல்பாட்டிற்கு ஆதாரமாக விளங்குகிறது என அறியும் பொழுது பிங்களா 2400 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்திய அறிவியல் சிந்தனையை பாராட்டாமல் இருக்க முடியாது. பிங்களா உருவ படத்தை காணலாம்.

பிங்களா தனது “சந்தஸ் சாஸ்த்ரா” படைப்பில் ஈரடிமான எண்களை எண்ணும் முறையின் விளக்கத்தில் தோன்றியது தான் இன்றைய மிக முக்கிய கணித சிந்தனையான “ஈருறுப்பு” தேற்றமாகும். மேலும் இந்த குறிப்பில் பிங்களா ஈருறுப்பு தேற்றத்தின் கெழுக்களை கருதி “மேரு பிரஸ்தாரா” (மேரு மலையின் படிகட்டுகள்) என்ற முக்கோண வடிவில் அமைந்த குறிப்பை வழங்கியுள்ளார். “மேரு பிரஸ்தாரா” என்பது ஜைன மதக் கருத்தாகும். இந்த சிந்தனையை பிங்களாவின் நூலிற்கு உரை எழுதிய ஹலாயுதா என்பவர் கூறியிருக்கிறார். ஆனால் இந்த முக்கோண வடிவ எண்கள் அமைப்பை இன்று நாம் “பாஸ்கல் முக்கோணம்” என அழைக்கிறோம். இதை பாஸ்கல் என்ற மேதை 17 ஆம் நூற்றாண்டில் (1653 ல்) தான் வழங்கியிருந்தார். அதே போல் பிங்களாவின் படைப்பில் இன்று கணிதத்தில் மிக பிரபலமாக கருதப்படும் “பிபோநாச்சி எண்கள்” குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே கணிதம், கணினி போன்ற துறைகளில் இன்றைய நுணுக்கமான செய்திகளை பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்திய அறிஞர் பிங்களா வழங்கியிருப்பது நமக்கு பெருமிதமான செய்தியாகும். “மேரு பிரஸ்தாரா” அமைப்பையும் பாஸ்கல் முக்கோண அமைப்பையும் நாம் படம் மூலம் காண்போம்.

மேற்கண்ட குறிப்புகள் தவிர இந்தியர்கள் கட்டிடக்கலையில் சீரிய தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமான கட்டிடங்கள், ஆலயங்கள், மண்டபங்கள் போன்ற கட்டிட வேலைப்பாடின் சிறப்பை வெளிப்படுத்தும் சின்னங்களை அமைத்தனர். கட்டிடக்கலை நுணுக்கங்களை நன்கறிந்து கட்டடவியல் துறையில் இந்தியர்கள் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், ஒரிசாவில் அமைந்த கோனார்க் சூரியக் கோயில் போன்ற எண்ணற்ற கோயில்களை இன்றும் கட்டிடக்கலை நிபுணர்கள் வியக்கும் வண்ணம் இந்தியர்கள் அன்றே கட்டியிருப்பது இதற்கு சான்றாகும். மிகப்பெரிய தூண்களை கொண்டு அமைத்த மண்டபங்களை இந்தியாவில் அநேக இடங்களில் இன்றும் காணமுடிகிறது. தூண்கள் மற்றும் உத்திரங்களை கட்டிடக்கலையில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் இந்தியர்களே!

கி. மு. 2600 முதல் கி. மு. 1900 ஆண்டு வரை கொடிகட்டி பரந்த ஹரப்பா நாகரீகம் (பண்டைய திராவிட நாகரீகம்) அக்காலத்திலேயே அருமையான குடியிருப்புகளை ஏற்படுத்தியுள்ளதை 1920 களில் அகழ்வாராய்ச்சி கண்டுப்பிடிப்பில் காணப்படுகிறது. இது பண்டைய இந்தியர்கள் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது. அக்குடியிருப்புகளில் இன்று உள்ளது போல அனைத்து வசதிகளும் காணப்படுகிறது. இந்த குடியிருப்புகளின் மீதியை ஆய்வு செய்த அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் அன்றைய இந்தியர்கள் ஏற்படுத்திய கழிவு வசதி, நீர் பாசன முறை, மழை நீர் சேமிப்பு முறை போன்ற அம்சங்களை கண்டு வியந்து போய்விட்டார்கள். இது அன்றைய இந்தியர்களின் அறிவாற்றலை நன்கு புலப்படுத்தும். ஆனால் இந்த வசதியுள்ள குடியிருப்புகளை ஏற்படுத்த அவர்களுக்கு அறிவியலும், தொழில்நுட்பமும் தேவைப்படுகிறது என்ற உண்மை புலப்படும். மேலும் இவர்களே உலகின் முதல் குடியிருப்புகளை ஏற்படுத்தி செழுமையாக வாழ்ந்தார்கள் எனவும் அறியலாம்.

பருத்தி, கம்பளி போன்ற பொருட்களை இந்தியாவிலேயே முதன் முதலில் தாயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. மேலும் சணல் கயிறினால் ஆன பொருட்களை பண்டைய காலம் தொட்டே இந்தியாவில் பயன்படுத்தியுள்ளனர். மற்ற நாடுகள் சமீப காலத்திலேயே இந்தியாவிடமிருந்து இந்த பொருட்களை தயாரிக்கும் நுணக்கத்தை கற்றறிந்தனர். நம்மிடம் இருந்து கற்ற வித்தையை பயன்படுத்தி “Jeans” எனும் குழாய் போன்ற துணி வகையை கண்டறிந்து நம்மிடமே அதனை விற்று வெளிநாட்டு நிறுவனங்கள் கோடீஸ்வர நிலையை அடைந்ததை காணும் பொழுது நகைப்பாக உள்ளது. இந்தியாவில் தோன்றிய கதர் ஆடைகள் உலகளவில் பிரபலமாகி இன்று இந்திய ஆடையின் சின்னமாக விளங்குகிறது. மேலும் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்த கதர் ஆடைகளை மையமாக வைத்தே தனது சத்யாகிரக போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார் என்று காணும் பொழுது இந்திய கண்டுப்பிடிப்புகளின் மகத்துவம் நமக்கு நன்கு விளங்கும்.

இந்தியா உலக கல்வி வளர்ச்சிக்கு இரு முக்கிய பல்கலைக்கழகங்களை கி. மு. காலத்திலும், கி. பி. காலத்திலும் ஏற்படுத்தியத செய்தியை நாம் சற்று காண்போம். கி. மு. 700 ஆண்டு காலத்தில் (கிட்டத்தட்ட 2700 ஆண்டுகளுக்கு முன்) இந்தியாவில் தக்ஷீலா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இன்றைய பாகிஸ்தானின் (அன்றைய இந்தியாவில்)ராவல்பிண்டியின் அருகில் அமைந்திருந்தது. இதுவே உலகின் முதல் பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது. அறுபதுக்கும் மேற்ப்பட்ட பாடங்களை அறிமுகபடுத்திய இந்த பல்கலைக்கழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உலகெங்கிலும் வந்து பயின்றார்கள். இதில் பாபிலோனியா, கிரேக்கம், சிரியா, அரேபியா மற்றும் சீனா போன்ற நாட்டு மாணவர்களும் அடங்குவர். இப்பல்கலைக்கழகத்தில் அறிவியல், கணிதம், மருத்துவம், அரசியல், போர்த்திறன், ஜோதிடம், வானியல், இசை, மதம், தத்துவவியல் போன்ற அனைத்து கல்வி அம்சங்களையும் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டது. மாபெரும் கல்வி நிலையத்தை உலக மக்கள் முன்னேற்றத்திற்காக அன்றே இந்தியா உருவாக்கியதை அதிக நபர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த பல்கலைக்கழகம் மூலம் இந்தியா உலக கல்வி நிலையங்களுக்கு முன்னோடியாக விளங்கி கல்வியை அனைவருக்கும் போதிப்பதில் பெரும் பங்காற்றியது என கூறலாம்.

தக்ஷீலா பல்கலைக்கழகம் மருத்துவத்தில் சிறப்பு பெற்று விளங்கியது. பாணினி, சாணக்யா மற்றும் புகழ் பெற்ற மருத்தவர் சரக்கா, பேரசரர் சந்திர குப்தா மௌரியர் போன்ற வல்லமை படைத்த பண்டைய இந்தியர்கள் இங்கு படித்தவர்களே! சாணக்யா இங்கு இருந்த பொழுதுதான் “அர்த்தசாஸ்திரம்” என்ற சிறந்த படைப்பை ஏற்படுத்தினார். அர்த்தசாஸ்திரம், பொருளாதாரத்தின் தன்மையை விளக்க உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த நூலாக கருதப்படுகிறது.

அதேபோல் கி. பி. ஐந்தாம் ஆண்டு காலத்தில் இந்தியாவில் நாலந்தா பல்கலைக்கழகம் மிகுந்த புகழ்ப் பெற்று விளங்கியது. இப்பல்கலைக்கழகத்தை குப்த மன்னர்கள் உருவாகினார்கள். இதுவே வரலாறு பதிவின் படி முதன் முதலில் சர்வ வசதிகளையும் கொண்ட முதல் பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது. தக்ஷீலா பல்கலைக்கழகம் கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருந்தாலும், பலகலைக்கழக விதிப்படியும், வசதிகளும் அங்கு இல்லாததால் நாலந்தா பல்கலைக்கழகத்தையே உலகின் முதன் முதல் பல்கலைக்கழகமாக சில அறிஞர்கள் இன்று கருதுவர். இங்கு ஆசிய கண்டதிலிருந்த அனைத்து நாட்டு மாணவர்களும் பயின்றாத கூறப்படுகிறது. மேலும் கிரேக்கம், பெர்சியா, மற்றும் சீன நாட்டு மாணவர்களும் இங்கு பயின்றார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் 90 லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பதினோராம் நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் படையெடுப்பின் பொழுது நாலந்தா பல்கலைக்கழகமும் அதன் நூலகத்தில் இருந்த அநேக புத்தகங்களும் சூறையாடப்பட்டு விட்டன. இப்புத்தகங்கள் அழியாமல் கிடைத்திருந்தால் உலகின் அறிவு வளர்ச்சி நான்கு, ஐந்து நூற்றாண்டுகள் முன்பே முன்னேறியிருக்க கூடும் என அறிஞர்கள் இன்று கருதுகின்றனர். இன்றைய சூழலில் தோன்றும் பண்டைய தக்ஷீலா பல்கலைக்கழகத்தையும் நாலந்தா பல்கலைக்கழகத்தையும் படத்தில் காணலாம்.

தற்சமயம் நாலந்தா பலகலைக்கழகம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு ராஜ்கிர் ஊரில், நாலந்தா நகரில், பீகார் மாநிலத்தில் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு மாணவர் சேர்க்கையை 2014 முதல் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது நமக்கு ஊக்கமான செய்தியாக விளங்குகிறது. இங்கு பயிலப்போகும் எதிர்கால மாணவர்கள் அக்காலத்தில் தோன்றிய இந்திய மேதைகள் போல உருவாக நாம் வேண்டுகிறோம்.

எனவே இவ்விரு பல்கலைக்கழகங்கள் மூலம் இந்தியா உலக கல்வி நிலையங்களுக்கு முன்னோடியாக விளங்கிய காலம் சென்று, இன்று இந்திய மாணவர்கள் அநேக அளவில் ஐரோப்பாவில் சென்று படித்தால் தான் தகும் என்று கருதி அங்கு செல்லும் நிலை ஏற்பட்டு விட்டதை காணும் பொழுது மனம் சற்று கனமாகத்தான் தோன்றுகிறது. நாம் நமது பாரம்பரியத்தை காப்பாற்ற தவறியதனாலேயே இந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். எனினும் அண்மை காலங்களில் இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிலையங்கள் ஆங்காங்கே தோன்றுவது இதமளிக்கிறது. ஆனால் இந்தியா தனது அறிவாற்றல் பெற்ற மாணவர்களை வேறெங்கும் செல்ல விடாமல் இங்கேயே பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் கி. பி. ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாகார்ஜுனா என்ற அறிஞர் பன்னிரெண்டு ஆண்டுகளின் கடும் உழைப்பில் வேதியியல், உலோகவியல், ரசவாதம், மருத்துவம் போன்ற பன்முக துறைகளில் அருமையான நூல்களை உருவாக்கினார். இந்த நூல் மூலம் இவர் இந்திய “வேதியியல் மற்றும் உலோகவியலின் தந்தை” என கருதப்பட்டார். அவரது புகைப்படத்தை காணலாம்.

இந்தியர்கள் தங்களின் உலோகவியல் திறனால் கைதேர்ந்த வாள்களை உருவாகினார்கள். நம் நாட்டு வாளைப் போல திறன் கொண்ட வாள் வேறெங்கும் காண கிடைக்கவில்லை. அதேபோல் திப்புசுல்தான் காலத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் அவர் பயன்படுத்திய ஏவுகணைகள் ஆங்கிலேயரை அதிர வைத்தது. இவ்வாறு பற்பல அறிவியல் தொழில்நுட்ட்ப சிந்தனைகளில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இணையில்லா இந்திய அறிவியல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book