பூஜ்ஜியத்திற்கு புது பரிமாணம் வழங்கிய இந்தியர்கள் முடிவிலி என்ற முடிவற்ற எண்ணிற்கும் கிட்டத்தட்ட ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அருமையான அர்த்தத்தை வழங்கியிருந்தனர். கி. மு. நான்காம் நூற்றாண்டில் யஜுர் வேதத்தில் ஈஷா உபநிஷதம் என்ற வேத நூலில் கீழ்காணும் சமஸ்கிருத குறிப்பு தென்படுகிறது.

இந்த சமஸ்கிருத பாடலுக்கு இணையான தமிழ் உச்சரிப்பை கொண்ட பாடலை கீழ் காணலாம்.

இப்பாடல் மூலம் நாம் என்ன அறிந்து கொள்ளலாம்? பூரணம் என்றால் முழுமை அல்லது முடிவில்லாத தன்மை பெற்றது என்று பொருள். இப்பாடல் மூலம் “முடிவிலியிலிருந்து முடிவிலியை எடுத்தால் முடிவிலியே கிடைக்கும்” என்ற மிகச் சிறந்த கணித உண்மையை காணலாம். இதை “முழுமையிலிருந்து நீக்கப்பட்ட எந்த முழுமையும், முழுமை தன்மையையே பெறும்” என்ற தத்துவ கருத்து கொண்டும் புரிந்து கொள்ளலாம். முழுமை என்ற நிறைவு தன்மையின் ஆற்றலை மிக நேர்த்தியாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் வழங்கியுள்ளது மெய்சிலிர்க்க வைக்கிறது.

அதேபோல் கிட்டத்தட்ட 2400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் குடியிருந்த ஜைன மதத்தவர் முடிவிலியை பற்றிய ஆழமான கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் கருத்துப்படி முடிவிலி மூன்று வகையாக விளங்கும் என்றும் இந்த ஒவ்வொரு வகையிலும் மூன்று உட்பிரிவுகள் அமையும் என்று கூறினர். எனவே ஜைன சிந்தனையின் படி முடிவிலியை மொத்தம் ஒன்பது வகையில் காணலாம். அவர்கள் ஏற்படுத்திய முடிவிலியின் வகைகளை சிறிது புரிந்து கொள்ளலாம்.

முதல் வகையில் எண்களை சிறிது, பெரிது என பாகுபாடு செய்து அதில் சிறிய எண், பெரிய எண் என அறிந்து கொள்ளலாம். இந்த வகையில் அமையும் எண்களை எண்ணி கூற இயலும். உதாரணமாக முதல் நூறு இயல் எண்கள் இந்த வகையை சாரும்.

இரண்டாம் வகையில் அமையும் எண்களை அதன் இருப்பிடத்தை வைத்து புரிந்து கொள்ளலாம். இதில் சிறிய எண், பெரிய எண் என அமையலாம் அல்லது அமையாமலும் போகலாம். இவ்வகையில் இயல் எண்கள் மற்றும் முழுக்களை உதாரணமாக கருதலாம்.

மூன்றாம் வகையில் அமைந்த எண்களை அதன் இருப்பிடத்தை வைத்து அறிந்து கொள்ள முடியாது. இவ்வெண்கள் கொடுக்கப்பட்ட இடத்தை முழுமையாக சிறிது கூட இடைவெளியில்லாமல் நிரப்பும் தன்மை பெற்றவை. இவ்வகையில் மெய் எண்களை உதாரணமாக கருதலாம்.

மேலே வழங்கப்பட்டுள்ள மூன்று வகைகளில் ஜைனர்களின் கருத்துப்படி இரண்டாம், மூன்றாம் வகையில் அமைந்த எண்கள் முடிவில்லாத தன்மையை (முடிவிலி) பெற்றது என்றும் இரண்டாம் வகை முடிவிலியை இந்தியர்கள் ‘அசம்கியாதா’ (எண்னற்றவை) என்றும் மூன்றாம் வகை முடிவிலியை ‘அனந்தா’ (முடிவற்றவை) என்றும் அழைத்தனர். இதன் மூலம் மூன்றாம் வகை முடிவிலி இரண்டாம் வகை முடிவிலியை விடப் பெரியது என்ற ஆழ்கருத்தை உணர்த்தினார்கள். எனவே முடிவிலிகளிலும் ஒன்றை விட மற்ற முடிவிலி பெரியதாக அமையும் என்ற கருத்தை கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் நன்கறிந்துள்ளனர். இச்செய்தி இன்றளவும் அறிஞர்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த ஆச்சரியத்திற்கு என்ன காரணம்?

முடிவிலிக்கு நேர்த்தியான கணித அமைப்பை 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மன் நாட்டு கணித மேதை கேண்டார் என்பவரே வழங்கினார். மேலும் ஜைனர்கள் கருத்தான ஒரு முடிவிலி மற்ற முடிவிலியை விட பெரியதாக அமையும் என்ற கருத்தை 20ஆம் நூற்றாண்டில் “Continuum Hypothesis“ என்று அழைப்பர். இந்த மாபெரும் கருத்தாழம் மிக்க செய்தியை அன்று வாழ்ந்த இந்தியர்கள் சாதாரணமாக வழங்கியதே ஐரோப்பிய அறிஞர்களின் ஆச்சரியத்தின் காரணமாக அமைந்தது.

இறுதியாக இந்தியர்கள் முடிவிலியின் பண்பை தம் வழிப்பாட்டு கலாச்சாரத்துடன் அமைத்த உதாரணங்களை காண்போம். சிவபெருமான் தன் தலைமுடியையும், பாதத்தையும் எவரும் காண இயலா வண்ணம் பெரும் பிரமாண்டமான சொரூபத்தை அடைந்தார். அவரது தலைமுடியை காண பிரம்மா ஒரு பறவை வடிவில் மேலே பறந்து சென்றார். அதேபோல் அவரது பாதத்தை காண மஹாவிஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமியை குடைந்து கீழ் நோக்கி சென்றார். எவ்வளவு முயன்றும் சிவபெருமானின் தலை முடியையும், பாதத்தையும் இருவரும் காண முடியவில்லை. இதற்கு காரணம் சிவபெருமானின் தலை மற்றும் பாதம் முடிவற்ற நிலைக்கு சென்றதேயாகும். இந்த முடிவற்ற நிலையைத் தான் நாம் முடிவிலி என அழைக்கிறோம்.

அதேபோல் மஹா விஷ்ணு இவ்வுலகை காக்க பத்து அவதாரங்கள் எடுத்தார் என கருதப்படுகிறது. இதில் ஐந்தாம் அவதாரமாக கருதப்படும் வாமன அவதாரத்தில் மஹா விஷ்ணு வானுயுர சென்று இந்த புவியை தன் காலால் அளந்தார் என கூறப்படுகிறது. விஷ்ணு இவ்வாறு செய்ய வேண்டுமானால் அவரது உருவம் முடிவிலி நிலையை அடைய வேண்டும் என்பது புலனாகும். மேலும் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரமாக கருதப்படும் வராக அவதாரத்தில் அவர் கடலின் அடியில் மூழ்கிய நம் பூமியை காக்க பன்றி உருவெடுத்து அசுரனை வென்று கடலின் அடியில் இருந்த பூமியை தன் மூக்கில் சுமந்த படி நின்று காத்தார் என அமைகிறது. சரி, இதில் என்ன அறிவியல் செய்தி உள்ளது? இதனை அறிந்து கொள்ள முதலில் விஷ்ணுவின் வராக அவதாரத்தின் காட்சியை கீழ் கொடுக்கப்பட்டுள்ள படம் மூலம் காண்போம்.

மேற்காணும் படத்தில் பன்றி வடிவில் தோன்றும் விஷ்ணுவின் மூக்கில் இருக்கும் பூமியை பாருங்கள்! அதன் வடிவம் வட்டமாக (கோளமாக) காட்சியளிக்கிறது. இந்த நிகழ்வு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடைப்பெற்றதாக கருதப்படுகிறது. மேலும் மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் மனிதனின் பரிணாம வளர்ச்சியை குறிக்கும் என இன்று அறிஞர்கள் கருதுகின்றனர். மற்ற குடியினர் அன்றாட வாழ்க்கை நடத்த தேவையான சிறு செய்திகளை கையாண்ட நேரத்தில் நம் இந்தியர்கள், பூமி கோள வடிவில் (Spherical Shape) தான் அமைந்தது என்ற அறிவியல் உண்மையை அன்றே தெள்ள தெளிவாக அறிந்திருந்தனர்.

எனவே நம் புராண கதைகளிலும் கூட மர்மமான அறிவியல் செய்திகளை மிக நேர்த்தியாக இந்தியர்கள் குறிப்பிட்டுள்ளது உண்மையில் பிரமிக்க வைக்கும் செய்தியாகும். மேலும் அன்றைய இந்தியர்கள் மற்ற குடியினரின் அறிவியல் சிந்தனைகளுக்கு அப்பாற்ப்பட்டு விளங்கினர் என்று புரிகிறது. இந்த உதாரணங்கள் நம் கலாச்சாரத்துடன் அறிவியல் சிந்தனைகள் எவ்வளவு ஒன்றியிருக்கிறது என்பதை தெள்ள தெளிவாக உணர்த்துகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இணையில்லா இந்திய அறிவியல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book