தமிழகத்தில் அமைந்த சிதம்பரம் எனும் ஊரில் சிவபெருமான் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு சிவபெருமானை “நடராசன்” (நடனம் ஆடும் ஈசன்) என்று போற்றி வழிப்படுகின்றனர். சிவபெருமான் அந்த பெயருக்கு ஏற்ப இருவகையான நடனம் புரிவார் என இந்தியர்கள் நம்புகின்றனர். அவை ஆனந்த தாண்டவம் மற்றும் ருத்ர தாண்டவம் எனும் பெயர்களை கொண்ட நடனங்களாகும். சரி இதிலென்ன அறிவியல் உட்கருத்து உள்ளது என்று தானே நமக்கு நினைக்க தோன்றும்? முதலில் சிவபெருமானின் இரு நடனமுறைகளை கீழ்காணும் படம் மூலம் அறியலாம்.
ஆனந்த தாண்டவம் ருத்ர தாண்டவம்
ஆனந்த தாண்டவம் பிரபஞ்சத்தை தோற்றுவிப்பதற்கும், ருத்ர தாண்டவம் பிரபஞ்சத்தை அழிப்பதற்கும் சிவபெருமான் ஏற்படுத்தும் நடனங்களாக கருதப்படுகின்றன. பிரபஞ்சம் என்ற ஒன்று தோன்றினால் அது அழிய வேண்டும் என்ற கோட்பாடில் தோற்றம், அழிவு ஆகிய அம்சங்களை ஏற்படுத்தவே சிவபெருமான் இந்த இரு நடனங்களை அவ்வவப்போது நிகழ்த்துவதாக நம்பப்படுகிறது. சிவபெருமானின் இந்த தோற்றம், அழிவு ஆகிய தன்மைகளை ஏற்படுத்தும் இந்த நடனத்தை அறிவியல் அறிஞர்கள் இந்த பிரபஞ்சத்தின் தோற்றம், அழிவிற்கு இணையான அறிவியல் கோட்பாட்டுடன் ஒப்பிட்டு காண்கின்றனர். உதாரணமாக இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் “Big Bang Theory” என்ற இயல் தான் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
Big Bang இயலின் மாதிரிப்படம்
இந்த இயலின் படி பிரபஞ்சங்கள் திடீர் வெடித்தலால் ஏற்பட்ட சிதறல்கள் என்றும் அவை குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பின் வலுவிழந்து அழிந்து போகும். மீண்டும் சில காலம் பிறகு உருவாகும். இந்த பிரபஞ்ச தோற்றம், அழிவு பண்பைத்தான் சிவபெருமானின் நடனங்கள் வெளிப்படுத்துகின்றன என்று சர். ஜேகோப் எப்ஸ்டீன், கார்ல் சகான், ப்ரிட்ஜோஃப் காப்ரா மற்றும் பல அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே தில்லையில் ஆடும் சிவபெருமானின் நடனம் பிரபஞ்சத்தின் தோற்றம், அழிவு ஆகிய இரு முக்கிய அம்சங்களை குறிப்பது உண்மையில் திகைப்பாக உள்ளது.