மேற்கூறிய செய்திகள் தவிர அநேக அறிவியல் சார்ந்த செய்திகள் இந்தியாவில் உதயமானது. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு காண்போம்.

(i). யோகா

கி. மு. 200 ல் தோன்றிய ஆச்சாரிய பதாஞ்சலி மனிதனின் உடல், மனம், ஆத்மா போன்றவற்றை கட்டுபடுத்தவும் நல்லொழுக்கத்தை பேணிக்காக்கவும் ‘யோகா’ என்ற பயிற்சி முறையை இந்தியா வாயிலாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் “யோகக்கலையின் தந்தை” என்ற பெயரை பதாஞ்சலி பெற்றார். இவர் தமிழிலக்கியத்தில் தோன்றும் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக திகழ்கிறார். இவரை நடனக்கலையின் குருவாகவும் கருதுவர். இவர் யோகக்கலை தவிர மருத்துவம் மற்றும் இல்லகனம் ஆகியவற்றிலும் நன்கு தேர்ச்சி பெற்று விளங்கினார். பதாஞ்சலியின் உருவப்படத்தை காணலாம்.

பதாஞ்சலி “யோக சாஸ்த்ரா” என்ற நூலை யோகக்கலையின் நுணுக்கங்களை விவரிக்க எழுதினார். இப்புத்தகம் மூலமே இன்று நாம் யோகக்கலையின் அநேக செய்திகளை அறிந்துள்ளோம். எனவே இப்புத்தகம் யோகக்கலையின் மூல புத்தகமாக விளங்குகிறது.

இப்புத்தகத்தில் பதாஞ்சலி யோகக்கலையில் மொத்தம் எட்டு நிலைகள் உள்ளதாக கூறியுள்ளார். அவை யமா, நியமா, ஆசனா, பிராணாயாமா, பிரத்யகாரா, தாரணா, தியானா மற்றும் சமாதி என்ற எட்டு நிலைகளாகும். சமாதி என்ற இறுதி நிலையை அடைபவர் முழு யோகியாகவும், ஞானியாகவும் கருதப்படுவார். அவரால் ஐம்பூதங்களை கட்டுப்படுத்த முடியும். பல அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று கூறப்படுகிறது. யோகக்கலையை இன்று உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு இன்றைய மனிதனின் அவசர வாழ்விற்கு சற்று மன, உடல், ஆன்ம ரீதியாக இக்கலை ஆறுதல் அளிக்கிறது. உடல் உபாதைகளை குறைக்க பிராணாயாமம் என்ற யோகக்கலையின் உட்பிரிவு பயன்படுத்தப்படுகிறது. எனவே உலகில் மனிதனின் மன நிம்மதிக்காக ஒரு அறிவியல் சார்ந்த கலையையே உருவாக்கிய பதாஞ்சலியை என்றென்றும் மக்கள் மறவாமல் போற்றுவர். பதாஞ்சலியின் பங்களிப்பினால் இந்தியா உலகிற்கு யோகக்கலையை வழங்கிய பெருமை அடைகிறது.

(ii) திறம்பெற்ற நீர்த்தேற்றம்

உலகின் முதன் முதல் அணைக்கட்டு இந்தியாவிலேயே அமைக்கப்பட்டது. தெனிந்தியாவில் தமிழக மாநிலத்தில் அமைந்த திருச்சிராப்பள்ளி என்ற ஊரிலிருந்து கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் கல்லணை பெரிய அணைக்கட்டு என்ற அணைக்கட்டே உலகின் முதன் முதல் அணைக்கட்டாக கருதப்படுகிறது. இந்த அணைக்கட்டை படத்தில் காணலாம்.

கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலன் என்ற சோழ மன்னனால் இந்த மாபெரும் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு 1082 அடிகள் அகலமாகவும், அதிகபட்ச உயரம் 18 அடிகளாகவும், நாற்பது முதல் அறுபது அடி நீளமாகவும் உள்ளது. அக்காலத்தில் மக்கள் நலன் பேணிக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பிரமாண்டமான அணைக்கட்டு தமிழகத்தின் அன்றைய விவசாய பாங்கையும், கட்டுமான ஆற்றலையும் பறை சாற்றும் சினமாக விளங்கி வருகிறது.

(iii) நிறமாலை

ரிக் வேதத்தில் அமைந்த ஒரு குறிப்பை காண்போம்:

“சூரியனின் தேரை ஏழு குதிரைகள் இழுத்து கொண்டு செல்கின்றன”

சரி, இந்த கூற்றில் என்ன செய்தி உள்ளது? நம் முன்னோர்கள் அரிய செய்திகளை இலை மறை காய் மறையாய் தெரிவித்திருந்த செய்திகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

சூரிய ஒளிக் கதிர்களினால் வானில் தேங்கியிருக்கும் நீர் துளிகள் ஒளிர்விட்டு மின்னும்பொழுது உருவாகும் நிறமாலை அற்புத காட்சியையே நாம் வானவில் என்று அழைக்கிறோம். சூரியனின் ஒளிக் கதிர்கள் நீர்த்துளிகளில் பட்டு ஏழு வண்ணங்களில் வானத்தில் வில் போல வளைந்து காணப்படுவதால் இதை வானவில் என்று அழைக்கிறோம். ஆனால் சூரியனின் ஒளிக் கதிர்கள் ஏழு நிறத்தில் தோன்றும் இயற்கையில் அமைந்த அறிவியல் செய்தியையே சூரியனின் தேரை இழுத்து செல்லும் ஏழு குதிரைகளாக வர்ணிக்கபட்டிருக்கின்றன. எனவே அக்கால இந்தியர்கள் வானவில் (நிறமாலை) தோற்றத்தின் இயற்கை அற்புத செய்தியை முதன் முதலில் வழங்கிய பெருமை பெறுகிறார்கள். இச்செய்தியை விளக்கும் படத்தை காணலாம்.

(iv) சாதுர்ய சிந்தனை

உலகிலேயே தர்க்க ரீதியை அதிகளவில் பயன்படுத்தும் விளையாட்டு ‘சதுரங்கம்’ எனும் விளையாட்டாகும். மொத்தத்தில் அறுபத்திநான்கு கட்டங்களை கொண்ட இந்த அரிய விளையாட்டை இந்தியாவே உலகிற்கு வழங்கியது. இந்த விளையாட்டு தோன்றுவதற்கு பல கதைகளை கூறுவதுண்டு. அதில் ஒரு கதையில் இரண்டை பொது தகவாகக் கொண்டு அமைந்த பெருக்குக் குறித்தொடர் வரிசை அமைப்பிலான செய்தியை காண முடிகிறது. இன்றும் சதுரங்கம் ஒருவரின் அறிவிற்கு சவாலான விளையாட்டாகவே கருதப்படுகிறது. “சதுரங்கம்” என்ற வார்த்தைக்கு இராணுவத்தின் நான்கு பிரிவுகள் என்று பொருள்படும். இராணுவத்தின் நான்கு பிரிவுகள் காலாட்படை, குதிரைப்படை, சேனைப்படை, யானைப்படை என்பவையாகும். இப்படைகளுக்கு தகுந்தவாறு முறையே சிப்பாய், குதிரை, சேனை, யானை போன்ற காய்களை ராஜா, ராணி காய்களுடன் சேர்த்து சதுரங்கத்தில் அமைத்தார்கள். சதுரங்க விளையாட்டில் பல யுக்திகள் கையாளப்படுகிறது. சதுரங்க விளையாட்டை தவிர “பாம்பும்-ஏணியும்” என்ற புகழ்பெற்ற விளையாட்டும் இந்தியா மூலமே தோன்றியது.

இன்று “FIDE” எனும் அமைப்பு சதுரங்க விளையாட்டின் விதிமுறைகளை அமைத்து அவ்விளையாட்டை பாதுகாத்து வருகிறது. இந்தியாவின் தலைச்சிறந்த சதுரங்க வீரராக கருதப்படுபவர் ஐந்து முறை உலக சதுரங்கப்பட்டம் வென்ற தமிழர் திரு. விஸ்வநாதன் ஆனந்தாவார். இவரது சதுரங்க சாதனைகள் மூலம் இந்தியாவில் பல சதுரங்க மேதைகள் உருவாகியுள்ளனர். உண்மையில் ஆனந்த இந்தியாவின் சதுரங்க கிளர்ச்சியை தூண்டுவதற்கு பெரும் துணையாய் அமைந்திருக்கிறார். ஆனந்த போன்ற பல மேதைகளை இந்தியா சதுரங்க விளையாட்டில் எதிர்நோக்கி உள்ளது. சதுரங்க பலகையையும், விஸ்வநாதன் ஆனந்த 2008 ல் ஜெர்மனியில் உலக சதுரங்க பட்டம் வென்ற தருணத்தில் எடுத்த புகைப்படத்தையும் காணலாம்.

(v) மொழி இலக்கண வடிவமைப்பு

பாணினி (கி. மு. 520 – கி. மு.460) சமஸ்கிருத மொழிக்கு இலக்கண வடிவமைப்பை வழங்கி பெருமை அடைந்தார். ஆனால் வெறும் இலக்கணத்தை ஒரு மொழிக்காக அமைக்க கருதாமல் அம்மொழி மட்டுமல்லாது மற்ற மொழிகளுக்கும் இவர் வழங்கிய முறைகளை பயன்படுத்தும் வண்ணம் அமைத்ததே பாணினியின் வெற்றி அடங்கியுள்ளது. இவர் அமைத்த மொழி இலக்கண அமைப்பு முறை இன்று கணினி மொழியாக்கத்திற்கு ஏற்படுத்தப்படும் மொழி சார்ந்த மென்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. எனவே கிட்டத்தட்ட 2500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இந்தியர் அமைத்த மொழி வடிவமைப்பு முறை இன்றளவும் கணினி மொழியாக்கத்திற்கு பயன்படுகிறது என்றால் அது பாணினியின் ஆற்றலையே வெளிப்படுத்தும். இதனால் இன்று பாணினியை “மொழி மென்பொருள் தயாரிப்பின் தந்தை” என போற்றுகின்றனர். பாணினியின் உருவப்படத்தை காணலாம்.

(vi) காப்புரிமையாகாத கண்டுப்பிடிப்பு

இத்தாலி நாட்டை சேர்ந்த மார்கோனி என்பவர் கம்பியில்லா மின் தபாலை கண்டறிந்ததற்காக 1909 ல் இயற்பியலில் நோபல் பரிசை வென்றார். மார்கோனி தனது கண்டுப்பிடிப்பை முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் 1897 ல் விளக்கி காண்பித்தார். ஆனால் அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய கொல்கத்தாவில் இந்திய அறிவியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் இதே உண்மையை இந்தியர்கள் முன்னிலையில் தெரிவித்திருந்தார். இந்திய அறிவியல் மேதை ஜகதீஷ் சந்திர போஸ் புகைப்படத்தை காணலாம்.

மார்கோனி கண்டுப்பிடிபிற்கு முன்பே அந்த செய்தியை அறிந்திருந்த போஸ் தனது கண்டுப்பிடிபிற்கு (முற்கால இந்தியர்கள் போல) காப்புரிமை பெறவில்லை. போஸ் வழங்கிய குறிப்புகளில் ஒரு சில சிந்தனைகளையே மார்கோனி தேடி கொண்டிருந்தார். அது போஸ் மூலம் அறியப்பெறவே மார்கோனி உடனடியாக தனது பெயரில் காப்புரிமை பெற்றார். எனவே கம்பியில்லா மின்தபால் எனும் அறிவியல் கண்டுப்பிடிப்பு இன்று வரலாற்றில் ஒரு ஐரோப்பிய அறிஞரால் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இச்சிந்தனை போஸ் என்ற இந்தியர் மூலமே முதலில் உதயமானது பிற்காலத்தில் தான் தெரியவந்தது. இத்தகவலை http://web.mit.edu/varun_ag/www/bose_real_inventor.pdf#sthash.xjli6Co2.dpuf என்ற இணைய இணைப்பின் மூலம் விவரமாக தெரிந்து கொள்ளலாம்.

(vii) நம்பப்படும் சாதனை

சர்ச்சைக்குரிய பாலமாக விளங்கும் ராமர் சேது பாலம் இந்து நம்பிக்கையின் படி இராமாயண காலத்தில் ராமரால் வானர சேனைகளின் துணையுடன் அமைக்கப்பட்ட பாலமாக கருதப்படுகிறது. இப்பாலம் ராமேஸ்வரம் தீவிற்கும் (பாம்பன் தீவு), இலங்கையின் வடமேற்கு கடல் எல்லை பகுதியில் அமைந்த மன்னார் தீவிற்கும் இடையே முப்பது கிலோ மீட்டர் நீளத்தில் அமையப்பெற்ற பாலமாக கருதப்படுகிறது. இப்பாலத்தின் வழி சென்றே ராமர் தன் துணைவி சீதா தேவியை இலங்கையிலிருந்து மீட்டு வந்ததாக இராமாயண காவியம் கூறுகிறது.

ஆனால் இப்பாலம் உண்மையில் மனிதர்களால் கட்டப்பட்டதா அல்லது இயற்கை படிவங்களின் மூலம் உருவானதா? என்ற கேள்விக்கு இன்றளவும் பல அகழ்வாராய்ச்சிகளும், புவியமைப்பியல் சோதனைகளும், கதிரியக்க கரிம சோதனைகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குழுவின் ஆய்வு முடிவும் ஒவ்வொரு விளக்கத்தை அளிப்பதால் இப்பாலத்தை கட்டியது பற்றிய உண்மை நிலை இன்றளவும் அறிவியல் ரீதியாக நிச்சயமாக நிரூபிக்கபடவில்லை என்றே கூறலாம். ஆனால் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இந்திய எல்லைக்கும், இலங்கை எல்லைக்கும் இடையே பாலம் இருப்பதை அமெரிக்காவின் நாசா அமைப்பு அதன் அதிநவீன செயற்கை கோள் மூலம் சில வருடங்களுக்கு முன் வெளியிட்டது. நாசா வெளியிட்ட செயற்கை கோள் படத்தை காணலாம்.

நாசா வெளியிட்ட படம் மூலம் இந்திய கடல் எல்லைக்கும், இலங்கை கடல் எல்லைக்கும் இடையே பால அமைப்பில் அக்காலத்தில் வழி இருந்தது உறுதி செய்கிறது. ஆனால் இப்பாலத்தை மனிதர்கள் தான் அமைத்தார்களா? அல்லது இயற்கை சீற்றத்தினால் உருவான பவழப் பாறையின் தோற்றமா? என மிக சரியாக கூற முடியவில்லை. நாசாவிடம் இக்கேள்வியை எழுப்பியதற்கு, நாசா கருத்து ஏதும் தெரிவிக்காமல் நயமாக நழுவியது. எது எவ்வாறியினும் ராமர் பாலத்தை மனிதர்கள் அமைத்திருக்கும் பட்சத்தில் இந்தியர்களே உலகின் முதன் முதல் பாலத்தை அமைத்த பெருமையை பெற்றனர்.

மேற்கூறிய தகவல் போல வேறுபல கண்டுப்பிடிப்புகள் இந்தியாவில் தான் தோன்றியதா? என உறுதியாக கூறப்பட முடியாமல் போகின்றன. அக்கண்டுப்பிடிப்புகள் இந்தியாவில் தோன்றியிருந்தால் அதனை முதன் முதலில் வழங்கிய பெருமை நம்மையே சாரும்.

18. இறுதிச் சிந்தனை

கணிதம், வானியல், இயற்பியல், கணினியியல், உலோகவியல், மருத்துவம், தத்துவவியல், மொழியியல், கட்டிடக்கலை, வான்பயண அறிவியல் போன்ற பல்வேறு அறிவியல் துறைகளில் அக்காலத்தில் உலகிற்கு முன்னோடிகளாக விளங்கிய இந்தியர்களின் இன்றைய நிலை என்ன? இக்கேள்வியே இந்த இறுதிச் சிந்தனையின் முக்கிய நோக்கமாகும்.

அக்கால இந்தியர்கள் அற்புத அறிவியல் கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தியதை மேற்கண்ட அத்யாயங்களில் கண்டோம். அதேபோல் இந்த அரிய கண்டுபிடிப்புகளை உணர்ந்த இந்திய மேதைகள் பெரும்பாலோனோர் ஞானி நிலையை அடைந்தே விளங்கினர். அவர்களை இன்று மகா முனிவர்கள் என்றும் ரிஷிகள் என்றும் போற்றப்படும் நிலையை காண்கிறோம். ஆனால் ஞானி நிலையை அடைந்த இந்த பெருமக்கள் எவ்வாறு மற்ற குடியினருக்கு தோன்றாத செய்திகளை துல்லியமாக வழங்கினர்? இது சிந்திக்கப்பட வேண்டிய கருத்தாகும்.

அக்கால இந்தியர்கள் ஞானி நிலையை அடைந்ததாலேயே உலகத்தின் தேவைகளான வசதி, பதவி, வாய்ப்பு, புகழ், அதிகளவில் பணம் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல் தாங்கள் வழங்கவிருக்கும் அறிவியல் செய்திகளை அதனுள்ளேயே சென்று ஆழமாக தெரிந்து கொண்டனர். இதற்கு அவர்களது மனம், உடல் ஆகியவை கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும். இதனாலேயே அவர்கள் கடுந்தவம் புரிந்து தங்களது ஐம்புலன்களை இயற்கை உபாதைகளுக்கு அப்பாற்பட்டு ஆட்கொள்ள வைத்தனர். எனவே தங்களது அறிவுத் தேடலில் அற்புத சிந்தனைகளை எளிதில் உருவாக்க முடிந்தது. அறிவு சார்ந்த ஒரு கருத்தை புரிந்துகொள்ள எதையும் எதிர்பாராமல் தங்கள் வாழ்வையே அதற்காக அற்பணித்தனர். இந்த அற்பணிப்பு தான் அவர்களின் அளவில்லா அறிவியல் ஆற்றலின் வெளிப்பாடாக விளங்கியது.

ஆனால் இன்றைய அறிவியல் ஆய்வின் நிலை என்ன? கடும் உழைப்பில் பெரிய செய்திகளை பல வருடங்களின் தேடலிற்கு பிறகு வழங்கி ஒரு ஆய்வு பட்டத்தை பெற்ற காலம் சென்று ஒரு குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே கற்கும் நிலை வந்ததால் அறிவியல் சிந்தனையின் ஆழ்நிலையை இன்றைய மாணவர்கள், ஆய்வாளர்கள் காண முடிவதில்லை. மேலும் இன்று நாம் சற்று தேய்மானம் அடைந்து விட்டோம். நம் முன்னோர்களின் அரும்பெரும் சாதனைகளை கூறியே நம் காலத்தை கழித்து விடுகிறோம். உலகளவில் ஏன் இந்தியாவால் பெரும் மேதைகளை அதிகளவில் உருவாக்க முடிவதில்லை?

எத்தனை ஆண்டுகள் தான் நோபல் பரிசு வென்ற சர்.சி.வி.ராமன், கணித மேதை ராமானுஜன் போன்ற மிக மிக அரிய இந்திய மேதைகள் பற்றியே பேசிக்கொண்டிருப்போம்? நோபல் பரிசு வழங்க ஆரம்பித்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நான்கு இந்தியர்களே அறிவியலில் இதுவரை அப்பரிசை வென்றுள்ளனர். இதுவரை மொத்தத்தில் எட்டு நபர்களே இந்தியா சார்பில் நோபல் பரிசை வென்றுள்ளனர். இதில் மூன்று நபர்கள் மட்டுமே இந்தியாவிலேயே இருந்து இப்பரிசை வென்றார்கள். அறிவியல் பாரம்பரியம் மிக்க இந்தியாவில் ஏன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது? நம் நாட்டில் இருக்கும் மக்கள் தொகைக்கு மிக குறைந்த அளவிலேயே அறிவியல் மற்றும் மற்ற துறைகளில் பெரும் சாதனைகள் புரிபவர்கள் இன்று உள்ளனர். இதை எவ்வாறு சரி செய்வது?

இவ்வளவு இடற்பாடுகள் இருப்பினும் இந்தியா சில துறைகளில் சாதிக்கத்தான் செய்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியா பல செயற்கை கோள்களை விண்ணில் ஏவியிருக்கிறது. நிலவை ஆய்வு செய்வதற்கென்றே “சந்திராயன்” எனும் இந்திய தயாரிப்பில் அமைந்த செயற்கை கோளை செலுத்தியுள்ளோம். அதேபோல் செவ்வாய் கிரகத்தின் தன்மையை அறிந்து கொள்ள “மங்கள்யான்” எனும் செயற்கை கோளை இந்தியா அண்மையில் செலுத்தி உலக கவனத்தையும் பாராட்டையும் வானியல் ஆய்வில் பெற்றுள்ளது. அதேபோல் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற துறைகளிலும் கணிசமான பங்களிப்பை கடந்த ஐம்பது ஆண்டு காலக்கட்டத்தில் வழங்கியுள்ளோம். ஆனால் சிந்திக்கப்படவேண்டிய செய்தி என்னவென்றால், அதிகளவில் அறிவியல் சிந்தனை பெற்ற அறிஞர்களை இந்தியாவால் உருவாக்க முடியவில்லை. சமீப காலங்களில் இந்தியாவின் ஆய்வு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள அதிக நபர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற செய்தியை நாம் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். எனவே இதை முதலில் நாம் சரி செய்ய வேண்டும்.

அறிவியல் ஆய்வை கட்டாயத்தின் பேரில் புரியாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்தியா தனது அறிவு செல்வங்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை, வாய்ப்பை நம் நாட்டிலேயே செய்து கொடுத்தால் இந்தியாவிலேயே பல அறிவியல் சிந்தனைகள் உருவாகி நாம் இழந்த பெருமையை மீண்டும் பெறுவோம். நம் முன்னோர்களின் மரபணு இந்தியர்களாகிய நம்மிடம் உள்ளதால் இந்தியாவில் இருந்தே சாதிக்க முடியுமா என்ற கேள்விக்கே இடமில்லை. நிச்சயம் இந்தியாவில் இருந்து கொண்டே சாதிக்கலாம். பண்டைய இந்தியர்களின் அறிவியல் ஒரு அற்புத அறிவுப் பெட்டகமாக, அறிவுக் களஞ்சியமாக விளங்கியது. அந்த பெருமையை பேணிக்காப்பது நமது கடமையல்லவா? எனவே நம் பூர்வீகத்தை அறிந்து நாம் எவருக்கும் குறைந்தவர் இல்லை என கருதி சரியான முறையில் நம்பிக்கையுடன் நம் அறிவுத் தேடலை அந்தந்த துறையில் செய்தால் இந்தியா அறிவியலில் பழையபடி மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. இந்த இலக்கை அடைய நாம் ஒன்று சேர்ந்து பொறுமையாக இந்தியாவில் இருந்தே பாடுபட வேண்டும். அவ்வாறு செய்தால் இந்தியாவில் அறிவியல் புரட்சி ஏற்பட்டு நாம் பல புதிய அறிவியல் கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தி இழந்த அறிவியல் புகழை மீண்டும் பெறுவோம்.

வாழ்க இந்திய அறிவியல் ஆற்றல்! வாழ்க இந்திய அறிவியல் மாமேதைகள்!!.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இணையில்லா இந்திய அறிவியல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book